கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை போலீஸ் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யுடுயூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன. காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் சஷ்டி கவசத்தையும் இந்து கடவுள்களையும் அவதூறாக பேசியவர்கள் மீது குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சுரேந்திரன் மீது நேற்று குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதை அடுத்து இன்று சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும் ஜாமீனில் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது