தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இனி நேரில் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வீட்டுக்கு கிடைக்கும்.முதல்கட்டமாக இந்த பயோமெட்ரிக் நடைமுறையை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்படி ரேஷன் பொருள் வாங்க கடைக்கு சென்றால், ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்டை, கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷனில் ஸ்கேன் செய்வார். அதன்பின்னர் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும். பொருட்கள் வாங்கியவுடன், நுகர்வோர் ஏற்கனவே அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். இதுவே இப்போது உள்ள நடைமுறை,
இந்த நடைமுறைப்படி குடும்பத்தினருக்கு தெரியாமல் அவர்களின் பொருட்களை ரேஷன் கடைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.இதனால், பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் தமிழகத்தில் பயோமெட்ரிக் விற்பனை முனைய இயந்திரம் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் மாற்றப்பட உள்ளது. திருச்சி கிழக்கு பகுதியில் 121 கடைகள், திருச்சி மேற்கு பகுதியில் 92 கடைகள், மண்ணச்சநல்லூர் பகுதியில் 94 கடைகளில் பயோமெட்ரிக் கருவி மாற்றப்பட உள்ளது. இதனால் பழைய இயந்திரம் மூலம் பொருட்கள் வழங்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மற்ற மாவட்டங்களுக்கு படிப்படியாக பயோமெட்ரிக் மிஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் யார் வேண்டுமானாலும் இனி ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாது. குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைத்து பொருட்களை வாங்க முடியும். இதன் மூலம் உண்மையான பயனாளர்களுக்கு மட்டுமே இனி பொருட்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது .