தமிழ்நாட்டில் மட்டும் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக 7 பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. அதன் விளைவாக ஒர் சிறுமி உயிர் இழந்த செய்திகளை நாம் கேட்டும், கடந்தும் வந்து இருப்போம், இந்த காலகட்டத்தில் பாலியல் கொடுமைகள் ஆண் பெண் என்று எந்த ஒரு பாலினம் வேறுபாடின்றி இருசாராருக்கும் நடைக்கிறது, இது ஏன் எதற்கு தனக்கு நடக்கிறது என்று தெரியாத வயதிலேயே எந்த குற்றமும் செய்யாத அவர்கள் தனிமை, சமுக வெறுப்பு மற்றும் தீண்டாமைக்கு தள்ளப்படுகிறார்கள். இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீய பழக்கத்திற்கு அடிமையாகமல் காக்க உதவிக்கரம் நீட்டுகிறார் கோவையில் சீட்ரீப்ஸ் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை (Seedreaps Educational & Charitable Trust) என்னும் அரசு சாரா மையத்தின் நிறுவனர் நரேஷ் கார்த்திக்.
கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக், உளவியலில் பட்டப்படிப்பை முடித்த தனது 21 வயதில் தொழில்நுட்ப வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை தனது நண்பருடன் துவங்கினார். ஆரம்பக்காலத்தில் தங்களுக்கென அலுவலகம் இல்லாததால் அனைத்து சந்திப்புகளையும் அவர் வீட்டின் அருகில் இருக்கும் தேனீர் விடுதியில் தான் நடத்தினார். 2001 ஆம் ஆண்டு அந்த தேனீர் கடையில் வேலை பார்த்த பணிப்பெண் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மேல் படிப்பை தொடராமல் இங்கு வேலை செய்துக் கொண்டிருந்தார். படிப்புக்கு பணம் இல்லை என்று நினைத்தேன் ஆனால் மனம் கனக்கும் அளவுக்கு வேறு ஒரு சோகமே அவளிடம் கொட்டி கிடந்தது ” அவளுடைய அம்மா அவரை தனியாக அப்பாவிடம் விட்டுச் சென்றுவிட்டத்தால், அவளின் அப்பா மறுமணம் செய்துகொண்டார். நாம் பெரும்பாலும் கேட்கும் சித்தி கொடுமைகளை அனுபவித்த இந்த பெண்னை அவள் பள்ளி படிப்பை முடித்தவுடன் 33 வயதுடைய ஒருவருக்கு 67 ஆயிரம் பணம் வாங்கி திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். இதைத் தெரிந்த நரேஷ் பல முறை அப்பெண்ணின் தந்தையிடம் பேசி புரிய வைக்க முயற்சி செய்து உள்ளார், அவர் முயற்சிகள் எல்லாம் தோல்வியடைய , அதன் பின் அவருக்கு தெரிந்த கோவை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் இதற்காக உதவி கேட்டுள்ளார், அவர் மூலம் அப்பெண்ணின் தந்தையிடம் பேசி, பேராசிரியரான தனது அம்மாவின் உதவியோடு அப்பெண்ணை கல்லூரியில் சேர்த்து அந்த சிக்கலை தீர்த்தார்.
Name of the payee | SEEDREAPS EDUCATIONAL AND CHARITABLE TRUST |
Bank Name | SBI Bank |
Bank where A/c is held | Saiba colony Branch, Coimbatore-11 |
Bank A/c Number | 37815642532 |
IFSC Code | SBIN0004792 |
கல்லூரியில் சேர்த்தால் மட்டும் போதாதே அப்பெண்ணின் படிப்புக்குத் தேவையான மற்ற செலவுகளுக்கு நிதி உதவி வேண்டும் என்று நினைத்தார் நரேஷ். அன்றைக்கு காவல்துறையில் பணியாற்றிய உயர் அதிகாரிகளும், துணை உதவி ஆணையர்களும் உதவி செய்து அந்த பெண்ணை கல்லூரி விடுதியல் தங்க வைத்து படிக்க வைத்தனர். இவர்களின் இந்த செயலே சீட்ரீப்ஸ் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை தொடங்குவதற்கான அடித்தளம்.
இந்த செயலுக்கு மூலதனமாக இருந்த உதவிய ஆணையருக்கு நன்றி தெரிவிக்க நரேஷ் கார்த்திக் ஃபோன் செய்தபோது, நீங்கள் செய்தது சிறு துளி தான், இன்னும் செய்யவேண்டியவை நிறைய இருக்கிறது என்று கூறி தன்னுடைய ஆர்வத்தை மேலும் தூண்டியதாக நரேஷ் கார்த்திக் கூறினார், அதன் பின் ஆணையரிடம் தொடர்ந்து பேசி காவல்துறைக்கு வரும் இது போன்ற சிக்கல்கள் ஏராளம் என்றும், வெளியில் தெரியாத சிக்கல்கள் இன்னும் அதிகம் என்றும் புரிந்து கொண்டேன். அவரின் உந்துதலே இந்த அறக்கட்டளையை மேலும் வளர செய்தது என்று நெகிழ்ச்சியுடன் தன் பயணத்தை பகிர்ந்தார் நரேஷ்.
எந்த ஓர் செயலையும், பழக்கவழக்கத்தை விதைத்தால் மட்டுமே அது முளைக்கும், என்ற நோக்கத்துடனே தனது அமைப்புக்க சீட் ரீப்ஸ் என்ற பெயர் வைத்ததாக கூறுகிறார், இந்த அமைப்பின் மூலம் பாலியல் கொடுமை, வன்முறை மற்றும் தீய பழக்கத்திற்கு அடிமை ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறு வாழ்வு கொடுத்து, கல்வி அளித்து, சமுதாயத்தில் மரியாதையான இடத்தை பெற வழிவகுத்துத் தருவதே இந்த அமைப்பின் நோக்கம் என்றார். 2011ல் துவங்கிய இந்த அமைப்பின் மூலம், இதுவரை 1000த்துக்கும் மேலான மீட்புப் பணியில் ஈடுபட்டு பல மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு கிடைக்க வழிகாட்டியுள்ளார்.
இவரது இந்த அமைப்பு மற்ற அமைப்புகள் போல் விடுதியோ அல்லது தங்குமிட வசதியோ இல்லை. பிரச்சனை என வரும் குழந்தைகளை விடுதி வசதி இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்கின்றனர். “சமூக சிக்கல்களை சந்தித்து வரும் அனைத்து குழந்தைகளையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து வைத்தால் அவர்கள் கடந்த காலத்தை மறந்து முன்னோக்கி செல்ல மாட்டார்கள். நம்மை போன்று சாதாரண மக்களுடன் சேர்ந்து இருந்தால் தான் நன்மை பெருவர்,” என்கிறார் நரேஷ். இதுபோன்று கல்வி அமைப்பில் பிள்ளைகளை சேர்க்கும் பொழுது அவ்வமைப்பின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் அல்லது இருவருக்கு மட்டுமே அக்குழந்தைகளின் பின்னணிகள் தெரிவிக்கப்படும், இதன் மூலம் மாணவர்கள் இடையில் எந்த பிரிவினையும் வராமல் இருக்கும் என நுணுக்கமாக பேசுகிறார் நரேஷ். பல குழந்தைகள் தங்களது சொந்த தாய் தகப்பன் மூலமே பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். வீட்டிற்குள்ளேயே குழந்தைகளுக்கு லஞ்சம் போன்று ஏதேனும் கொடுத்து வாயை அடைத்து விடுவதால் பல குற்றங்கள் வெளியில் வருவதற்குள் அவர்களுக்கு தெரியாமலே பல மோசடிகளை கடந்து வருகின்றனர். பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள், விபச்சார விடுதியில் பிறந்த குழந்தைகள், பலமுறை தகப்பனால் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்கள் என நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவு மனம் மற்றும் உடல் வேதனையை அனுபவித்த குழந்தைகளை மீட்டு ஆலோசனை செய்து படிக்க அனுப்பியுள்ளனர் இந்த அமைப்பினர். “எங்களிடம் வரும் குழந்தைகள் முடிந்த அளவு அரசு சேவை துறையில் பணியாற்ற வைக்கிறோம். இதன்மூலம் சமூகத்திற்கு உதவும் வாய்ப்பு ஏற்படும், மேலும் சிக்கல்களின் நுணுக்கத்தை அறிந்து ஊழல் இல்லாமல் செயல்படுவார்கள் என நம்புகிறோம்,” என்கிறார் நம்பிக்கையுடன். இவரது நம்பிக்கைக்கு ஏற்றார் போல் இதில் பலர் கல்வித்தகுதி பெற்று, முன்னிலை அரசுத் துறையில் பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்களை அரசுத் துறையில் மேல் இடத்தில் இருக்கும் சில சிறந்த அலுவலர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகின்றனர். இதனால் அவர்கள் ஊக்கம் அடைவார்கள் என்கிறார் நரேஷ். தற்போது தேசிய அளவில் ’சீட்ரீப்ஸ்’ இயங்கி வருகிறது. ஒய்வு பெற்ற காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் இவர்களின் அமைப்பில் இணைத்துள்ளனர். இவர்கள் உதவியுடன் மீட்புப் பணியில் சற்று சுலபமாக செயல்பட முடியும் என்கிறார் நரேஷ். உதவிக்கு வரும் எல்லா குழந்தைகளும் அவர்கள் சார்ந்த காவல் நிலையத்திடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகே நிதி உதவி அளிக்க முன் வருகிறது இவர்களது அமைப்பு. “நாம் செலவு செய்து பள்ளியில் சேர்த்தபின் படிக்காமல் சென்று விட்டால் நஷ்டம் நமக்கே. என் அமைப்பை நம்பி பல நல்லுள்ளங்கள் உதவித் தொகை தருகின்றனர் அதை வீணாக்கக் கூடாது,” என்கிறார். இன்னும் பல குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றவே ஊடகங்களின் மூலம் வெளி உலகிற்கு தெரியப்படுத்துகிறோம் என முடிக்கிறார் நரேஷ் கார்த்திக்.
அதுமட்டுமின்றி தற்போதுள்ள சூழலில் இந்த அமைப்பின் சேவைகள் அதிகரித்துள்ளதால் மேற்கொண்டு உதவிகள் தேவைப்படுவதாக அந்த அமைப்பின் நிறுவனர் நரேஷ் கூறுகிறார். இதனால் அவர் தன்னார்வலர்கள் அல்லது பொதுமக்கள் யாராயினும், விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் தங்கள் அமைப்பிற்கு உதவலாம் என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த அமைப்பில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணியில் உங்களால் முடிந்த உதவி அல்லது நன்கொடை அளிப்பதன்மூலம் நீங்களும் இந்த மகத்தான சேவையில் ஒரு அங்கமாக திகழலாம்.