ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!
மதுரையில் வசித்து வரும் இளைஞர் வேல்முருகன் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் விரும்பினர். இந்த சூழலில் தான் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்னை தொடர்பாக வெங்கடேஷ் என்பவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு மாற்று சீறுநீரகம் தேவை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வேல்முருகனின் சிறுநீரகத்தை வெங்கடேஷ்க்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர், மருத்துவமனையில் இருந்து வேல்முருகனின் சிறுநீரகம் உரிய பாதுகாப்போடு ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக ஆம்புலன்ஸ் செல்லும் வழிநெடுகிலும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு தடை ஏற்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுரையில் இருந்து மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி நாகர்கோவிலுக்கு சரியான நேரத்தில் சிறுநீரகத்தை கொண்டு வந்து சேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில்குமாருக்கு பாராட்டுகள் குவிந்தது.