சென்னை,
தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கூடுதலாக பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளையுடன் 8ம் கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது, இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக்கூட்டத்தில் தளர்வுகளால் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது பற்றி ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும் மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் கூடுதல் தளர்வுகளுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.