பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மெகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்களும், இடதுசாரிகளுக்கு 25 இடங்களும் வழங்க ராஷ்டிரீய ஜனதாதளம் முன்வந்துள்ளது.
பாட்னா,
243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. குறிப்பாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 50 இடங்களை வழங்க அந்த கட்சி முன்வந்துள்ளது.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பாய் விரேந்திரா கூறுகையில், ‘மெகா கூட்டணியில் காங்கிரசுக்கு 50 இடங்களும், இடதுசாரிகளுக்கு 25 இடங்களும் வழங்கப்படும். கூட்டணியில் உள்ள விகாஸ் ஷீல் இன்சான் கட்சி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகளுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் தனது சொந்த தொகுதிகளில் இருந்து இடம் வழங்கும். எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் குழப்பம் எதுவும் இல்லை. அனைத்து பேச்சுவார்த்தைகளும் ஓரிரு நாட்களில் முடிவடையும்’ என்று தெரிவித்தார்.
மெகா கூட்டணி அப்படியே இருப்பதாக கூறிய பாய் விரேந்திரா, இந்த கூட்டணி பீகார் தேர்தலில் கணிசமான பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனவும் கூறினார்.