ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். அப்போது, பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது கட்சியை இணைப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பரபரப்பு கிளம்பி உள்ளன. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 151-ல் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். அதேபோல் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 22- இடங்களில் வெற்றி பெற்றது.
தற்போது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெகன்மோகன் ரெட்டி, அடுத்தகட்ட அரசியல் வியூகத்தை வகுத்துள்ளார். இதன்படி நேற்று மாலை அவர் டெல்லி புறப்பட்டுச் சென்ற அவர் இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
மக்களவையில் 22 எம்.பி.க்களுடன் நான்காவது பெரிய கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளது. புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் மற்றும் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நரேந்திர மோடி அரசுக்கு ஜெகன்மோகன் ஆதரவளித்துள்ளார். மாநிலங்களவையிலும் 6 உறுப்பினர்களை கொண்டுள்ள ஒய்எஸ்ஆர் காங் கிரஸ், பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி யுள்ளதால் ஜெகன்மோகனின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது.