விவசாயிகளுக்கு உதவும் வகையில், வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது.இந்த நிதி மேலாண்மை செய்து விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தனிநபர்கள் நிதியை பெறும் வகையில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.இந்நிலையில், வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மற்ற ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்ய தமிழக அரசின் வேளாண்மை துறையின் இயக்குனர் கடந்த செப்டம்பர் 24 ம் தேதி உத்தரவு பிறபித்தார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை.விசாரித்த நீதிபதி பார்த்திபன், வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, வழக்கு தொடர்பாக வேளாண் துறையின் முதன்மை செயலாளர், வேளாண்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 29 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.