மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்ட மசோதாவில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைப்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சட்டத்தினால் மாநில அரசின் அதிகாரம் எந்த வகையிலும் பறிக்கப்படவில்லை என்று கூறிய அவர், மத்திய அரசின் அதிகார வரம்பில் வரும் வேளாண் சட்டத்திலேயே மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதனால் விவசாயிகள் நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள வியாபாரிகளிடமும், விளை பொருட்களை விற்பனை செய்யும் அதிகாரம் கிடைத்திருப்பதாகக் கூறிய நிதியமைச்சர், இதனால் தாங்கள் விளைவித்த தானியங்களுக்கு விவசாயிகள் அதிக விலையை பெற முடியும் என்றார். கொள்முதல் செய்யப்பட்ட உடனேயே இரண்டு பங்கு தொகையும் எஞ்சியுள்ள தொகையை 30 நாட்களிலும் விவசாயிகள் பெறக் கூடிய அளவில், புதிய சட்டத்தில் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளதாக நிதியமைச்சர் எடுத்துரைத்தார். இந்த வேளாண் சட்டங்கள் அனைத்து விதத்திலும் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பின்னர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் சட்டங்களின் சிறப்புகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார். பல வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்ட வேளாண்துறை சீர்திருத்தங்களை பிரதமர் மோடி தற்போது மேற்கொண்டு வருவதாகவும், நீண்ட ஆய்வுக்கு பின்னரே இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகளிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.