கொரோனா பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அளித்தன. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
6 மாதங்களுக்கு பிறகு அனுமதி
இந்த நிலையில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி நந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்க 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் வந்த பக்தர்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
குறைவான பக்தர்கள்
பக்தர்கள் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. பிரதோஷத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அமருவதற்காக சமூக இடைவெளியுடன் வட்டம் போடப்பட்டிருந்தது. இதில் வெளியூரில் இருந்து வந்த பக்தர்களும், உள்ளூர் பக்தர்களும் அமர வைக்கப்பட்டனர். பின்னர் பெரிய நந்திக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழக்கமாக பிரதோஷ வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். ஆனால் நேற்று 100-க்கும் குறைவான பக்தர்களே பங்கேற்றனர்.