சேலம் மாவட்டத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு, மாவட்டத்தில் மிகப்பெரிய கால்நடை சந்தைகளான பேளூர் ஆட்டுச்சந்தை, மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை உள்ளிட்ட கால்நடை வாச்சந்தைகள் இன்று திங்கட்கிழமை கூடியது. இதனால், கால்நடை வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராம விவசாயிகள் மட்டுமின்றி, கல்வராயன் மலை, அருநுாற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை ஆகிய மலை கிராமங்களிலும் பெரும்பாலானோர் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். விவசாயிகள் மட்டுமின்றி, விவசாய கூலித் தொழிலாளர்களும், கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் வெள்ளாடு, செம்மறியாடு, நாட்டுக்கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பை உபதொழிலாக செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்றான வாழப்பாடி அடுத்த பேளூரில், 50 ஆண்டுக்கும் மேலாக திங்கட்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்கான பிரத்யோகமான வாரச்சந்தை கூடிவருகிறது. இதனால், மாவட்ட அளவில் ஆடுகள் வளர்ப்பு தொழிலில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.