தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் தவசி தேவர் மகன் அர்ஜுனன் 45. இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ. 15 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில் ரூ. 6. 5 லட்சத்தை திருப்பி செலுத்தி விட்டதாக தெரிகிறது.
தமுள்ள கடன் தொகையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தனியார் நிறுவனம் சார்பில் கடன் தொகைக்காக ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஜுனன் தேனி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு எழுதிக் கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே சென்ற அர்ஜுனன் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அர்ஜுனன் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.