பெங்களூரு : ஐ.என்.எஸ்., என்றழைக்கப்படும், ‘இந்திய பத்திரிகைகள் சங்கத்தின்’ தலைவராக, ‘தினமலர்’ கோவை பதிப்பு வெளியீட்டாளரும், தினமலர் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப இயக்குனருமான ஆதிமூலம் லட்சுமிபதி ஒருமனதாக இன்று(செப்., 25) தேர்வு செய்யப்பட்டார்.
அகில இந்திய அளவில்,800 பத்திரிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புதான் ஐ.என்.எஸ்., என, அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கம். இதன், 81வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இன்று காலை, 11 மணிக்கு நடந்தது. இதில், தினமலர், கோவை பதிப்பு வெளியீட்டாளரும், தினமலர் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப இயக்குனருமான ஆதிமூலம் லட்சுமிபதி,இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக,ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்குமுன், 1995-96ம் ஆண்டில், ‘தினத்தந்தி’ அதிபர், மறைந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இப்பதவி வகித்துள்ளார். அவருக்கு அடுத்து, அதாவது, 25 ஆண்டுகளுக்குப்பின், தற்போதுதான் தமிழ் பத்திரிகையைச் சேர்ந்தவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐ.என்.எஸ்.,என்பது,அகில இந்திய அளவில் பத்திரிகைகளுக்கென்றே இருக்கும் ஒரே ஒரு அமைப்பு ஆகும். இதற்குமுன், கடந்த, 1939 முதல் இதுவரை, இவ்வமைப்பின் தலைவராக, தமிழகத்தில் இருந்து, கஸ்துாரி சீனிவாசன், தி இந்து (1947 -48), ராம்நாத் கோயங்கா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ( 1951 -52), சி.ஆர். சீனிவாசன், சுதேசமித்திரன் ( 1953 -54), ஜி.நரசிம்மன், தி இந்து (1956 -57), என்.முரளி, தி இந்து (1983- 84), ஆர். லட்சுமிபதி, தினமலர் (1992 -93) ஆகியோர் பதவி வகித்துள்ளனர். இறுதியாக, கடந்த 1995 -96ல், ‘தினத்தந்தி’ அதிபர், மறைந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இந்த பதவியை வகித்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தமிழகத்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.