அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதித்த டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். டிரம்பின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வரும் மருத்துவர்கள், அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது என்று கூறினர். டிரம்பின் உடல் நிலை குறித்த வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் கொடி கட்டி பறக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருத்துவக் குழு கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரெம்டெசிவர் இரண்டாவது டோஸை முடித்துவிட்டார், மேலும் அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் சீராக உள்ளது. திங்கட்கிழமை (05-ம் தேதி) டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.
அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர். மேலும் இரத்த ஆக்ஸிஜன் அளவு வீழ்ச்சியடைந்தாக டிரம்ப் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை காலை முதல் காய்ச்சல் இல்லாமல் அவரது உடல் நிலை இயல்பாக இருப்பதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.