கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக, சிரமத்துக்கு ஆளாக இருக்கும் நபர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறைக்கு ஏற்பட்டுள்ளது. வேளாண்மையை தற்சார்பாக ஆக்கியதற்காக, அண்மையில் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகள் தெரிவித்தார்.
இந்தியக் குடிமக்களுக்கு போதிய உணவு தானியங்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், உதவி தேவைப்படும் நிலையில் உள்ள மற்ற நாட்டு மக்களுக்கும் சேர்ந்து விவசாயிகள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்வதாகப் பிரதமர் கூறினார்.
கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும், வேளாண்மைக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவித் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த வேளாண்மைக் கட்டமைப்பு நிதியம் இந்த நிதியாண்டு தொடங்கி 2029 வரையில் பத்தாண்டு காலத்துக்கு அமலில் இருக்கும். இத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆண்டுக்கு 3 சதவீத வட்டி சலுகையிலும், கடன் உத்தரவாதம் இல்லாமல் ரூ.2 கோடி வரையிலும் கடன்கள் அளிக்கும். விவசாயிகள், மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் (எப்.பி.ஓ.க்கள்), சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பேற்புக் குழுக்கள் (ஜே.எல்.ஜி.), பன்முகப் பயன்பாட்டுக் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்டோருக்கு இதன் மூலம் கடன் வழங்கப்படும்.
மேலும் தமிழகத்தில் தீவிர நெல் சாகுபடி முறை வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2020-21 ஆம் ஆண்டில் தீவிர நெல் சாகுபடி திட்டம் 27.18 லட்சம் ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தொடர்ந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், தமிழகத்தில் உணவுதானிய உற்பத்தி அதிகரித்து செப்டம்பருக்குள் 28 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற இலக்கு எட்டப்படும் என்று தமிழகத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.