நரேந்திர மோதி – ஒரு தேச பக்தனின் எழுச்சி
மாநில முதல்வராயிருப்பதற்கும் தேசப் பிரதமராயிருப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு என்பதை நாம் அறிவோம். மாநில முதல்வராயிருந்தால் பிரதமரின் நிலைப்பாட்டிற்கும் பிரதமர் அலுவலகத்தின் (PMO) ஆலோசனைக்கும் எதிராக நிலை கொள்ள முடியும். அவற்றின் படி நடக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. ஆனால் அந்த வசதியும், உரிமையும் தேசப் பிரதமருக்கு கிடையாது. பிரதமரால் முதல்வர்களை அலட்சியம் செய்து அரசாள முடியாது.
இத்தகைய சூழ்நிலையின் கட்டாயங்களை மூன்று வகைப்படுத்தி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
(அ) குஜராத் முதல்வர் மோதி – மாநில முதல்வராயிருந்த மோதி அரசியல் சாசனத்தின் 356-ஆம் பிரிவு குறித்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தார். இன்றும் அதே நிலைப்பாட்டைத் தான் கொண்டுள்ளார் என்பேன். இதில் அவர் அணியில் உச்ச நீதி மன்றம் கூட உள்ளது என்றும் எடுத்துக் காட்டுவேன். நம்மில் யாருக்காவது அவர் ஏன் 356-ஆன் பிரிவை உபயோகித்து இந்த மாநில அரசை அல்லது அந்த மாநில அரசை பதவி நீக்கம் செய்து குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டியது தானே என்ற எண்ணம் இருக்குமாயின் அதை மாற்றி கொள்வது சரி என்று நான் கூறுவேன்.
அதே போல் தேசத் துரோகக் குற்றம் சாட்டி ஒருவரை உள்ளே தள்ளுவதும் பிரம்மப் பிரயத்தனம் தான் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். FIR (முதல் தகவல் அறிக்கை) முதல் Charge Sheet (குற்றப் பத்திரிக்கை) வரை மிகச் சரியாக மனம் தளராது கடுமையான காலக் கெடுவுக்குள் பணியாற்ற வேண்டும். இதற்கு சரியான மனப் பக்குவம் உள்ள ஒரு விசாரணை அதிகாரி வேண்டும். இவ்வாறு செய்யாததால் தான் அந்த ஸபூரா ஜர்கர் (Safoora Zargar) என்ற கல்லூரி மாணவி முன் ஜாமீனில் உச்ச நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டாள். நரேந்திர மோதியும், அமித் ஷாவும் இது குறித்து நன்கு அறிவர் என்று தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் நாம் தான். இது குறித்தும் நாம் மன உளைச்சல் கொள்வதை நிறுத்திக் கொள்வது நல்லது.
தேசத்தின் தலைவர்களான அவர்கள் இருவரும் நம் மனதில் உள்ள குறுகிய (அல்லது) சிறிய கால அவகாசங்களைக் கொண்டு முடிவு எடுக்கவேண்டும் என்று அவர்களை நிர்பந்தப் படுத்த எண்ணுவது நாம் நம் தலையில் மண்ணள்ளிப் போட்டு கொள்ளும் ஒரு முயற்சி. நாம் எதிர்பார்க்கும் வேகத்தில் அவர்கள் வேலை செய்வதில்லை என்று வருத்தப்படுவது நமது மடமையும் கூட என்று அறிந்து கொள்வது நல்லது.
(ஆ) நமோவின் முதல் ஆட்சிக் காலம் ஆரம்பித்த போது இந்தியாவின் நிலைமை உலக நாடுகள் மத்தில் அதள பாதாளத்தில் இருந்தது என்றால் அது மிகை ஆகாது. தினமொரு ஊழல் கதை கேட்டு உலக நாடுகள் நம்மை எள்ளி நகையாடிக் கொண்டிருந்த காலம் அது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் இருந்து இந்தியாவைக் குறித்த மனப்பான்மையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் மோதி. இந்திய அரசியல் ஒரு குழப்பக் குட்டை என்று எண்ணுபவர்கள் சர்வதேச அரசியல் ஒரு குழப்பக் கடல் என்று தெரிந்து கொள்ளவேண்டும். வேற்று எண்ணம் கொண்ட நாட்டினரிடம் நல்லெண்ணம் கொள்ள வைக்க வேண்டும், இருவரையும் அனுசரித்துப் போக வேண்டும். இருவரையும் தன வசம் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் தன முகம் கோணாமல், அவர் மனம் நோகாமல் செய்து முடிக்க வேண்டும்.
அரபு நாட்டவரையும், இஸ்ரேலிய நாட்டவரையும் ஒரே கூடாரத்தில் கொண்டு வந்து, கை குலுக்கச் செய்ய வேண்டும்; அமெரிக்க, ரஷிய, சீன, வட கொரிய சண்டைக் கோழிகளை ஒருமித்தமாக, தமக்குள் சண்டை போடாமல் செயல்பட செய்ய வேண்டும். இவ்வாறான இலக்கை அடைய வழி வகுக்கும் பொழுது, நம் நாட்டின் பிந்தைய 60-ஆண்டு கால குப்பைத்தரம் வாய்ந்த அந்நிய நாட்டுக் கொள்கைகளை தூக்கி தூர எறிந்து விட்டு புது வழிக் கொள்கையையும் கொண்டு வர வேண்டும். இந்த இரு குறிக்கோள்களையும் மோதியின் முதல் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அவரும் அவர் அமைச்சர்களும் செய்து முடித்தனர் என்பது ஆச்சரியத்துக்குரியது என்றே சொல்வேன்.
முந்தைய ஆட்சிக் காலங்களை விட இன்று நாம் மிகச் சிறப்பாக இருக்கிறோம் என்றும் ஆணித்தரமாக அடித்துக் கூறுவேன். மோதிக்கு முன்பு ஆண்டவர்கள் இந்திய நாட்டில் அந்நிய நாடுகளின் சதிகளை முறிக்க சிறப்பாக வேலை செய்யவில்லை என்பதும், இந்திய நாட்டில் அவர்கள் கைக்கூலிகளை ஏவி விட்டு எப்போதும் சில வித குழப்பங்களை உண்டாக்கும் வண்ணம் ஒரு நிலைமையை உருவாக்கி விட்டனர் என்பதும் என் குற்றச்சாட்டு.
இதனால் அவர்களுக்கு என்ன பலன் என்று அறிய ஆவலா? இவ்வாறு செய்தால் தான் இந்திய மக்கள் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் பதவியும் பட்டமும் கொடுப்பார்கள் என்று எண்ணியிருந்தனர் என்பது என் கணிப்பு. இதை மிக நுண்ணியமாக அறிந்து இதில் அவர்களது விளையாட்டை அருமையாக லாவகமாக தோற்கடித்தார் மோதி என்பது என் வாதம்.
(இ) இவ்வாறு முதல் ஆட்சிக் காலத்தில் அந்நிய நாடுகளுடனான உறவை மேம்படுத்தி விட்டு, இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தவர் நாட்டின் மிகப் பெரிய சவால்களை நேரடியாக சந்தித்து உள்நாட்டு எதிரிகளை பின்னடையச் செய்தார் என்று நான் காண்கிறேன்.
ஜம்மு கஷ்மீர், ராமர் ஜென்ம பூமி, முத்தலாக் போன்ற விவகாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இவ்வாறு செய்த போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத் துறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதித் துறையின் குறுக்கீடு சற்று அடங்கி இருந்ததை காண முடிந்தது.
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் புரையோடிக் கிடைக்கும் பதவி புரோக்கர்களும், அவர்களை சாவி குடுத்து ஊக்குவிக்கும் அலுவலர் மற்றும் அரசியல்வாதிகளும் இன்றோ நாளையோ நீக்கப் படக் கூடியவர்கள் அல்லர். நாட்டுக்கு எதிராக செயல்படும் சக்திகள் – வெள்ளையுடை போர்த்திய வேட்டை நாய்கள், மற்றும், தலை வெட்டும் ரத்தக் காட்டேரிகளும் – நிர்வாகத் துறையிலும், ஊடகங்களிலும், திரைப்படத் துறையிலும், அன்னியச் செலாவணி நிறுவனங்களிலும் கொண்டுள்ள அதிகாரம் இன்று நேற்று உருவானது அல்ல.
தப்லீகி ஜமாத் என்னும் அமைப்பினால் நாட்டில் கொரோனா பரவியது என்று எழுதப்பட்ட குற்றச்சாட்டு அறிக்கைகளை நீதி மன்றங்கள் ஏற்றுக் கொண்டு வருகின்றன என்றால் அது ஒரு மிகச் சிறிய, ஆனால் மிக முக்கியமான ஒரு மைல்கல், என்றே நான் கொள்வேன்.
இவ்வாறு மெதுவாகவே மாற்றங்கள் நடந்தால், எப்போது தான் நாம் நம் நாட்டில் நாம் எதிர்பார்க்கும் முழு மாற்றம் காண்போம் என்று கேட்கிறீர்களா? மோதியை ஒரு சிங்கம் என்று கொள்ளுங்கள் – உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். சிங்கம் பசிக்கும் பொழுது தான் வேட்டையாடும். நமக்கு வேடிக்கை காட்ட வேட்டை ஆடாது அல்லவா?
அரசியல் சாசனத்தின் 370-ஆம் பிரிவுக்கு விடை கொடுப்பு, 500-1000 நோட்டுகளின் பணமதிப்பிழப்பு, GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, உழவர் மசோதா, இவை எல்லாம் பார்க்கும் பொழுது சரியான திசை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது இந்தியா என்று நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள உதாரணங்களை உற்றுப் பார்த்தால் நாட்டின் நலன் கருதி ஒவ்வொரு இடையூறாக களைந்தெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மன உறுதி கொண்ட பிரதமரை நாம் காண முடியும். நமக்கு தேவையான வேகத்தில் செல்கிறாரா என்றால், நாம் முதலில் “நமக்குத் தேவையான” என்பதன் விளக்கத்தைத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு பிரதமராக, அவர் பதவியின் நிமித்தமாக அவர் அறிந்து கொண்டவற்றையெல்லாம் மனதில் கொண்டு, நாட்டுக்காக சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.
பாகிஸ்தான் ஒரு புறம் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறுகிறது. இப்பக்கம், இந்திய கிழக்கு எல்லையில் சீனப் படைகள் இந்தியாவிடம் உதை வாங்கி பின்னடைகின்றன. இவ்வாறு வெற்றி கொள்ளும் அளவிற்கு வலிமை படைத்த இந்திய ராணுவம் இன்று கடமைப் பட்டுள்ளது மோதியின் ஆதரவுக்குத் தான். ஒவ்வொரு தீபாவளியையும் ராணுவத்தினருடன் கொண்டாடச் செல்லும் மோதியை தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் பாரதத் தாயின் உன்னதப் புதல்வன் என்று ஏன் கொண்டாட மாட்டார்கள் நம் படையினர்?
யாரும் எதிர்பாரா வண்ணம் எதிரிகளுக்கு இரும்புக்கை கொண்டு பதில் கொடுக்கும், இந்திய தேசத்தின் நலனே மனம் முழுவதும் கொண்டு வாழும், மோதியிடம் இருந்து இன்றைய நாட்டு நடப்பு குறித்து தினசரி விளக்கம் கேட்போர் மன வளர்ச்சியில் ராகுல் காந்தியை விட குன்றியவர் என்று கூற நான் தயங்க மாட்டேன்.
இறுதியாக, கீதையில் கூறியபடி அவர் ஒரு கர்மயோகி என்று கண்டு கொள்ளுங்கள்.
கீதையின் தத்துவங்களான வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பதும், உருவாக்கப்பட வேண்டுமென்றால் அதில் பங்கு கொள்ள வேண்டும் என்பதும், ஒன்றை மாற்ற அதன் வழி சென்றே மாற்ற வேண்டும் என்பதும், மோதியின் வழிமுறைகளில் தென்படுகிறது.
ஒரு இக்கட்டான நிலையில் இருந்த இந்தியத் திருநாடு இவரை தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்பரீட்சையில் தேர்ச்சி பெற்றதனால் மறுமுறையும் பதவி ஏற்கும் படி மீண்டும் இத்திருநாட்டு மக்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். இப்போது நான் திட்டவட்டமாக கருதுவது என்னவென்றால் அவருக்கு மற்றோர் முறையும் ஆட்சி அளிக்க வேண்டும் என்பது தான்.
இவ்வாறு இப்படிப்பட்ட தேசத்தின் எழுச்சி ஒளியாக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நரேந்திர மோதியை குறித்து மேலும் பல பக்கங்களில் எழுதிக் கொண்டே போகலாம். இந்தியாவை பொருளாதார வளர்ச்சியிலும், பன்னாடுகளின் மத்தியிலும், தன்னிறைவிலும், ராணுவ, அறிவியல், படிப்பு, வேளாண் துறைகளிலும் பெருமைக்குரிய நிலைமைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் இம்மகானைக் குறிக்காமல் எழுதப்படும் இந்திய வரலாறு மிகவும் குறைபாடுடையது என்று கூறி இக்குறுங்கட்டுரையை முடிக்கிறேன்.
#வாழ்க பாரதம் … #ஜெய் ஹிந்த்
கட்டுரை_ சுவாமிநாத சர்மா
தமிழாக்கம் உதவி #விஜயலக்ஷ்மி