சென்னை : நியமன உத்தரவின்றி பணியாற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து, கோவில் நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் ஒப்படைக்கக் கோரிய வழக்கில், அறநிலையத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர், டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், பல கோவில்களில், முறையான நியமன உத்தரவுகள் இல்லாமல், நிர்வாக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்; இது, சட்டவிரோதமானது.
ஹிந்து அறநிலைய சட்டம், 1960ல் அமலுக்கு வந்த பின், பல்வேறு கோவில்களில், புதிதாக நிர்வாக திட்டங்களை வகுக்கவும் அல்லது இருக்கிற திட்டங்களில் மாற்றம் செய்யவும், அறநிலைய துறை துணை ஆணையர்கள் நடவடிக்கை எடுத்தனர். திருச்செந்துார், திருநெல்வேலி, திருச்செங்கோடு, அழகர்கோவில், வடுவூர் கோவில்களில், 1966ம் ஆண்டில் நிர்வாக அதிகாரிகளை, அறநிலைய துறை ஆணையர் தன்னிச்சையாக நியமித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனங்கள் செல்லாது.
இதையடுத்து, 40 கோவில்களுக்கு, ஆணையர் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இருந்தாலும், 40 கோவில்களில் எந்த உத்தரவும் இன்றி, நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். கோவில்களில் நிர்வாக அதிகாரிகள் இயங்குவது குறித்து கேள்வி எழுப்பி, நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு, அறநிலையத்துறை ஆணையர் அனுப்பிய பதிலில், முறையான நியமன உத்தரவு இருப்பதாக கூறவில்லை.
கடந்த, 1949 முதல், 1970 வரை வகுக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில், நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும், அவர்கள் முறையாக கோவில்களை நிர்வகிப்பதாகவும், பொதுவான பதிலை அளித்தார்.நிர்வாக அதிகாரிகளை நீக்கும்படி கோரியதை, நிராகரித்து விட்டார். கோவில் நிர்வாகத்தில், நிதியில், சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. நிர்வாக அதிகாரிகள் தவறு செய்கின்றனர்.
எனவே, நியமன உத்தரவின்றி பணியில் நீடிக்கும், நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து, கோவில் நிர்வாகத்தை, அறங்காவலர்களிடம் ஒப்படைக்கும்படி, அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.