திண்டுக்கலில் சலூன் கடை உரிமையாளர் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் நேற்று சலூன் கடைகள் அடைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரது 12 வயது மகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கைதான கிருபானந்தன் என்பவரை போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து நீதி கிடைக்கச் செய்ய வலியுறுத்தி திண்டுக்கல், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன.
இதனிடையே சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரை மாநகர் முழுவதும் உள்ள சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட சலூன் கடை உரிமையாளர்கள், சிறுமியை படுகொலை செய்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
